1. முதலீடு செய்ய வேண்டியதின் அவசியம்

ஆரம்பிக்கும் முன் 

பங்குசந்தை முதலீடு எந்த அளவு லாபம் தருமோ, அதே அளவு பணம் இழக்கும் ஆபத்தையும் கொண்டது என்பதை நினைவில் கொள்க . அதனால் பங்குகளை வாங்கும்முன் விற்கும் முன் உங்களுடைய நிதி ஆலோசகரிடம் கலந்து கொள்ளவும்.

இங்கே சொல்லப்பட்ட தகவல்கள், எண்கள் எல்லாம் 2025 ஜனவரி  மாதம் பதிவேற்றபட்டது. எதிர்காலத்தில் அவை சில சிறிய மாறுதல்களை கொண்டு இருக்கலாம். இருந்தாலும் முக்கிய மாற்றங்கள் அவ்வவ்போது மேம்படுத்தபட்டு கொண்டே இருக்கும். என்பதையும் நினைவில் கொள்க 

பங்குசந்தையில் பயன்படுத்தபடும் சொற்களை புரிந்துகொள்ள சில வார்த்தைகள் நேரடி ஆங்கிலத்திலும் , சில ஆங்கில வார்த்தைகள் தமிழ் எழுத்துருவிலும் பயன்படுத்தி உள்ளோம்.

இந்த தளம் மிகவும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. ஆகையால் புத்தகத்தில் இருப்பது போலல்லாமல் விரிவான தகவல்களைத் தவிர்த்து, முக்கிய விஷயங்களை மட்டும் எளிதில் புரிந்து கொள்ளும் முறையில் வழங்கியுள்ளோம்.

பணத்தை  பணமாக சேமிப்பதை விட முதலீடு செய்வது தான் இன்றைய காலக் கட்டத்தில் ஒரு தனிமனிதருக்கு மிக மிக முக்கியம். ஒருவர் சரியாக முதலீடு செய்ய கற்றுக்கொள்ளா விட்டால் காலப்போக்கில் இரண்டு பாதகங்கள் நடக்கும்.

  1.  நாம் முதலீடு செய்யாமல் சேமிக்கும் பணம், நாட்கள் போக போக அதன் மதிப்பை இழந்து கொண்டே வரும் (பணவீக்கம்)
  2.  பணத்தை வாரி வழங்கி நம்மை கோடிஸ்வரன் ஆக்கியிருக்ககூடிய நல்ல வாய்ப்பையும் தவற விட்டு இருப்போம்.

முதலில் நாம் சேமிக்கும் பணம் எப்படி அதன் மதிப்பை இழக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்

1. பணவீக்கம் (பணத்தின் வாங்கும் திறன் குறைதல்)

இன்று ஒரு பொருளை வாங்கும் அதே விலையில் இனிவரும் காலங்களில் வாங்க முடியாமல் போவதை பணவீக்கம்(INFLATION) என்று சொல்வார்கள். (பணவீக்கம் பற்றி தெளிவாக பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)

2000 ம் ஆண்டு கால கட்டத்தில் 100 கிராம் சோப்பின் விலை 10 ரூபாயாக இருந்தது. இன்று அதே 100 கிராம் சோப்பு விலை 2024ல்  38 ரூபாயாக உள்ளது. இதை சாதாரணமாக பார்க்கும்போது விலை உயர்வு போன்று தெரியும். ஆனால் இது விலைஉயர்வு அல்ல. பணத்தின் மதிப்பு குறைந்துள்ளதால் அதிக பணம் கொடுத்து அந்த பொருளை வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .
தெளிவாக பார்க்கலாம்

ஏதாவது ஒரு காரணத்தால் ஒரு பொருள் விலை மட்டும் தனியாக  ஏறினால் அதை விலைஉயர்வு என்று சொல்வார்கள். (உதாரணம் . அரசாங்கம் சிகரெட்டின் வரியை அதிக படுத்தியதால் , சிகரெட்டின் விலை மட்டும் உயர்ந்தது.மற்ற பொருட்கள் அல்ல)  

அதுவே, ஒட்டுமொத்த  எல்லா பொருளின் விலையும் கொஞ்சம் கொஞ்சமாக ஒருசேர உயர்ந்து கொண்டே சென்றால் அதை பணவீக்கம் என்று சொல்வார்கள். சரியாக சொல்லவேண்டும் என்றால், பணத்தின் வாங்கும் திறன் குறைகிறது என்று சொல்லலாம். அதனால் அதிக பணம் கொடுத்து அந்த பொருட்களை வாங்க வேண்டியுள்ளது.

உதாரணம்

ஒருவரிடம் 2000 வருடம் ஒருலட்சம் ரூபாய் பணம் இருக்கிறது. அதை அவர் பெட்டியில் வைத்து பூட்டி விடுகிறார். இன்று அதை திறந்து பார்க்கும் போது இன்றும், அது ஒரு லட்சம் ரூபாயாகத்தான் இருக்கிறது . ஆனால் 24 வருட இடைவெளியை இப்போது கணக்கிடும் போது அதன் மதிப்பு முற்றிலும் மாறியிருக்கிறது. கீழே உள்ள அட்டவணை பாருங்கள்.

பொருட்கள் 2000 ல் விலை அன்று ஒரு லட்சத்தில் 2024 ல் விலை இன்று
சோப்பு
10
10000 சோப்பு வாங்கலாம்
40
2500 சோப்பு வாங்கலாம்
பால் லிட்டர்
15
6666 லிட்டர் வாங்கலாம்
60
1666 லிட்டர் வாங்க முடியும்
பள்ளி கட்டணம்
10000
10 குழந்தைகள் சேர்க்கலாம்
40000
2 குழந்தைகள் மட்டும்
கடை சாப்பாடு
15
6666 சாப்பாடு வாங்கலாம்
80
1250 சாப்பாடு வாங்க முடியும்
வீட்டு வாடகை
2000
50 வீட்டுக்கு வாடகை
8000
12 வீட்டுக்கான வாடகை
ஒரு லட்ச ரூபாய் பணத்தை 2000-அம் வருடம் அவர் சேமிக்கும் போது, அந்த பணத்தால் என்ன செய்ய முடியுமோ. இன்று அதே பணத்தை கொண்டு நான்கில் ஒரு பங்குதான் செய்ய முடியும். இப்படி தான் ஆண்டுதோறும் பணம் அதன் வாங்கும் திறனை இழந்துகொண்டே இருக்கும். எதிர்வரும் வருடங்களில் இந்த மதிப்பு இன்னும் இறங்கும்.

இன்று 20000 சம்பளம் வாங்குகிற ஒருவரால் , 5 வருடம் கழித்து அதே 20000-தில் குடும்பம் நடத்த முடியாத நிலை ஏற்படும். வாடகை உட்பட அணைத்து செலவுகளும், பொருட்களின் விலையும் அதிகரித்து இருக்கும். ஆனால் சம்பளத்தில் பெரிய மாற்றம் இருக்காது.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது ஒன்று தான்.

நாம்(திருமண சிலவு, எமெர்கென்சி fund, கல்லூரி கட்டணம் போன்ற ஒருவருடதிருக்குள் தேவைபடும் பணத்தை மட்டும்தான். பணமாகவே சேமிக்க வேண்டும்

கோடிகணக்கில் பணத்தை உருவாக்கவேண்டும் என்றாலோ , குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும் போன்ற நீண்டகால இலக்கிற்கு பணத்தை வெறுமனே சேமிக்க கூடாது. முதலீடுதான் செய்ய வேண்டும். அப்படி முதலீடு செய்வது ஒருபக்கம் நம் பண மதிப்பை காக்கும் இன்னொருபக்கம் சரியான முதலீடாக இருந்தால், அதுவே நம்மை பெரும் செல்வந்தராக மாற்றும்.

நீங்கள் உண்மையிலே பெரும் பணக்காரர் ஆகவேண்டும் என்றால் முதலீடு செய்யும் பழக்கத்தை உருவாக்கி கொள்ளுங்கள். பெரும் பணக்காரர்களில் பலர் முதலீடு செய்வதால் மட்டுமே பணக்காரர்களாக மாறியுள்ளாரகள்.

2. நம்மை கோடிஸ்வரன் ஆக்க கூடிய வாய்ப்பு

பணவீக்கம் , இனி நாம் அடையகூடிய லாபம் , வரவு எல்லாமே கூட்டுவட்டி முறையில்தான் கணக்கிடுவோம் . இது ரொம்ப எளிய கணக்குதான். ஆனால் வாழ்க்கையையே புரட்டி போடும் அளவுக்கு வலிமை கொண்டது. கூட்டுவட்டி பற்றி முதிலீடு செய்பவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் . கூட்டு வட்டி பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இங்கே பார்க்கவும்

இதுவரை பணவீக்கத்தால் பணம் எப்படி அதன் வாங்கும் திறனை இழக்கிறது என்று பார்த்தோம். அணைத்து நாட்டிலும் பணவீக்கம் என்ற ஒன்று இருக்கும். அதன் சதவீதங்கள் நாட்டுக்கு நாடு மாறுபடும். இந்தியாவின் பணவீக்கம் கடந்த 20 வருடத்தில் தோராயமாக 5-7% கணக்கிட்டுள்ளார்கள். நாம் அதிகபச்சமாக 7 சதவீதத்தையே எடுத்துக்கொள்வோம்.

கடந்த 20 வருட பணவீக்க கணக்குபடி 1,00,000 என்பது 7% கூட்டுவட்டி என கணக்கிட்டால்  இன்று 3,86,000 வரும். அப்படி என்றால் அன்று ஒரு லட்சம் வைத்து என்ன என்ன செய்ய முடிந்ததோ , இன்று அதையே செய்ய கிட்டத்தட்ட 4 லட்சம் தேவை.  ஒருவேளை அவர் ஒருலட்சத்தை  முதலீடு செய்து இருந்தால் இன்று என்ன அவருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம். 

வளர்ச்சி விகிதம் உதாரணம் இன்றைய வளர்ச்சி என்ன நடந்திருக்கிறது
0%
பெட்டியில் பூட்டிவைப்பது
1,00,000
மதிப்பு 75% குறைந்து இருக்கும்
3%
SAVINGS BANK டெபாசிட்
1,86,000
உண்மையான மதிப்பில்லை
6.5%
FIXED DEPOSIT LIKE
3,69,000
பணவீக்கம்
11.2%
Gold
8,35,000
நல்ல வளர்ச்சி
14.9
ஸ்டாக் மார்க்கெட் NIFTY 50
16,08,000
மிக நல்ல வளர்ச்சி
இந்த அட்டவணையில் பார்த்தபடி   இன்று நாம் செய்யும் முதலீடு   7%  விட அதிக  ரிட்டர்ன்ஸ்  தரவேண்டும். அதுதான் சரியான முதலீடாக இருக்கும்
ROI – Return on investment. நாம் முதலீடு செய்யும் பணம் நமக்கு எவ்வளவு வருமானமாக திரும்ப தந்துள்ளது என்பதை ROI , RETURNS, REWARD , ரிட்டர்ன் போன்ற வார்த்தைகளில் குறிப்பிடுவோம்.
பொதுவாக நாம் செய்யும் முதலீடு வகைகள் ​

1. நிலையான வருமானம் தரும் முதலீடுகள் (FD , RD, BONDS)

ROI: 

அவர்கள் தரும் குறிப்பிட்ட சதவீதம் தான் ரிட்டர்னாக கிடைக்கும். சிலநேரத்தில் அவை INFLATION விட குறைவாக இருக்கும். நிபந்தனைகளை அறிந்து முதலீடு செய்ய வேண்டும்

SAFETY : 

பாதுகாப்பை பொறுத்தவரை ஷேர் மார்க்கெட் போன்ற அதிகம் ஆபத்து இல்லது, என்ன ரிட்டர்ன் எதிர் பார்க்கிறோமோ அது கண்டிப்பாக கிடைக்கும், குறைந்த ரிஸ்க். எனக்கு பணம் இழந்துவிடுவோம் என்று பயம் இருக்கிறது நான் ரிஸ்க் எடுக்க விரும்ப வில்லை என்றால் இது போன்ற முதலீடு களில் ஈடுபடலாம்.

LIQUIDITY: 

முதிர்ச்சி காலத்தில் தான் விற்க முடியும் . முன்பே பணத்தை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு என்று கட்டணம் , அபராதம் விதிக்கப்பட்டு இருக்கும் அதை கவனத்தில் கொள்ளவேண்டும்

LIQUIDITY என்றாலே எப்படி ஒரு பொருளை எளிதாக பணமாக மாற்றி கொள்ள முடியும் என்பது. தங்கம் உடனே பணம் தேவை படுகிறதா . அடகு கடைக்கோ , ஜுவல்லிக்கோ சென்று எளிமையாக பணமாக்கி கொள்ள முடியும். அதுவே நிலம் வாங்கி விற்கிறீர்கள் என்றால் அதை எளிதில் பணமாக மற்ற முடியாது உடனே வாங்குவதற்கு ஆள் கிடைப்பது கடினம்.

2. விலையுயர்ந்த உலோகம் (தங்கம் வெள்ளி போன்றவை)

ROI:  

கடந்த 20 வருடத்தில் தங்கம் 12% ரிட்டர்ன்ட் தந்திருந்தாலும் நாம் நகைகளாக கடையில் வாங்கும் போதே செய்கூலி, சேதாரம், GST என்று பணத்தை இழக்க வேண்டியிருக்கும். நம் முதலீட்டில் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கத்திற்கு ஒதுக்குவது போதுமானது.

SAFETY :

பாதுகாப்பானது , ஆனால் அதை நீங்கள் தான் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். உங்களிடமே இருக்கும்

LIQUIDITY: 

மிக எளிமையாகவே பணமாக மாற்றி கொள்ள முடியும்

3. ரியல் எஸ்டேட் (நிலம் , மனை , வீடு போன்றவை )

ROI: 

நிலம் இருக்கும் இடத்தை பொறுத்து பங்குச்சந்தைக்கு நிகரான லாபம் வழங்கும் (நிலத்தில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் சரியான இடத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும் சில இடங்கள் கிணற்றில் போட்ட கற்களை போல விலை அவ்வளவு சீக்கிரத்தில் ஏறாது. கடந்த சில வருடங்களாக ரியல் எஸ்டஸ் விலை மிதமிஞ்சி ஏறி உள்ளதால் இனி இதை போன்ற வளர்ச்சி தருமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. 2016 – 2020 கு பிறகு பெரிதான வளர்ச்சி இல்லை . நல்ல அனுபவத்துடன் அணுக வேண்டும். அதை பர்சனல் பைனான்ஸ் பகுதியில் பார்க்கலாம்

SAFETY : 

சரியான இடம் தேர்ந்து எடுத்துவிட்டீர்கள் என்றால் மிக பாதுகாப்பானது. பெரிதான விலை சரிவுகள் இருக்காது.

LIQUIDITY:  

பெரிதாக லிக்விடிட்டி இருக்காது . உடனே பணமாக மாற்றுவது என்பது மற்ற முதலீடுகளை விட கடினம். முதலீடு செய்யவும் குறிப்பிட்ட அளவு பணம் தேவைப்படும்.

4. பங்கு சந்தை (பங்குகள் , பரஸ்பர நிதி , Etf போன்றவை )

ROI:

சரியான பங்குகளை தேர்ந்து எடுத்து முதலீடு செய்து இருந்தால் மற்ற முதலீடுகளை விட அதிக ரிட்டர்ன் தரும். இதுவரை வரலாற்றில் 14-15 % return தர கூடியதாக இருந்துள்ளது.மிக சிறிய தொகை கொண்டு கூட முதலீடு செய்ய முடியும்

SAFETY : 

பங்குசந்தையில் எப்போதும் ஏற்றம் இறக்கம் இருக்கும் என்பதால் ரிஸ்க் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும் . அந்த ரிஸ்க்கை கையாள கற்றுக்கொள்ள வேண்டும்.

LIQUIDITY:

நல்ல பங்குகள் என்றால் எளிமையான லிகுடிட்டி இருக்கும், இருந்தாலும்  நாம் தேர்வு செய்யும் பங்கு , பரஸ்பர நிதி பொறுத்து மாறுபாடுகளும் நிறைய உண்டு.  பங்குசந்தை பற்றி பார்க்கும்போது தெளிவாக பார்ப்போம்

நீங்கள் எந்த அளவு ரிஸ்க் எடுக்கிறீர்களோ, அதே அளவு ரிட்டர்ன் கிடைக்கும்

Higher the risk the higher the return , the lower the risk lower the return .

இந்த அணைத்து முதலீடுகளிலும் குறிப்பிட்ட சதவீதமாக பிரித்து முதலீடு செய்யும் போதுதான் நம் பணம்  சரிவிகித முதலீடாக மாறும் . அதைபற்றி இனிவரும் ரிஸ்க் மேனேஜ் மென்ட் பகுதியில் விரிவாக பார்ப்போம் . முதலில் நாம் பங்குசந்தை  அறிந்து கொள்வோம்..

தொடர்புடைய கேள்விகள்.
error: Content is protected !!